தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பேபி... மாதாஜி!!!

Go down

பேபி... மாதாஜி!!! Empty பேபி... மாதாஜி!!!

Post by முஸ்லிம் Sat Dec 10, 2011 6:14 pm

வந்தாச்சு...
இறையருளால் நல்லபடியா எல்லாம் நலமே முடிச்சு வந்தாச்சு. என்னாலும்
முடியுமா என்றிருந்தேன்.. ஏகனை நோக்கிய எல்லாரின் பிரார்த்தனைகளும்
உறுதுணையாய் இருந்து உதவின என்றுதான் சொல்ல வேண்டும்.



போய்
வந்து ரெண்டு வாரமாகுது. ஆனாலும் இன்னும் அந்த பிரமிப்பு, பரவசம்,
மகிழ்ச்சியிலிருந்து விடுபட முடியவில்லை. பதிவு எழுதலாம் என்று நினைத்தால்,
எங்கு தொடங்க, எதை எழுத, எதை விட என்று பிடிபடாத நிலை. எல்லாவற்றையும்
எழுதினால் தொடராகவே ஆகிவிடும்.



இந்த
வருட நோன்பில் (ஆகஸ்ட்) திடீரென ஒரு நாள் ஹஜ்ஜுக்குப் போவோம்னு
முடிவெடுத்து, தனியார் ஹஜ் பயண நிறுவனங்களில் விசாரித்து, பதிவு செய்து,
விஸா வரத் தாமதமாகி, புறப்படும் நாள் வரை இந்த வருடம் போவோமா மாட்டோமோ
என்று சஸ்பென்ஸாகவே இருந்து, பின் இறைநாட்டத்தால் எல்லாம் கைகூடி... இதோ
போய்ட்டு வந்தும் ஆச்சு. ஹஜ் செய்ய ஆசைப்பட்டு, வருடக்கணக்கில்
காத்திருப்பவர்கள் இருக்க, ஒரே நாளில் எங்களை முடிவெடுக்க வைத்து,
புறப்படச் செய்த இறைவனின் கருணை... என்னவென்று சொல்ல...



பேபி... மாதாஜி!!! Madinah1


முதலில்
மதீனா... ஒரு ஏகாந்த அமைதியுடன் காணப்படும் நகரம். நான்கு நாட்கள் அங்கு
தங்கிவிட்டு, பின் மக்கா. எப்பொழுதும் பரபரப்பும், சுறுசுறுப்புமாய்
இருக்கும் தூங்கா நகரம். இரு நகர்களிலும் முக்கியமான பள்ளிவாசல்கள் உண்டு.
ஹஜ் காலங்களில், இரண்டிலும் தினமும் தொழுகைக்காக, ஐந்து நேரமும் மில்லியன்
கணக்கில் மக்கள் வெள்ளம் காணப்படும். என்றாலும், பள்ளி வளாகங்களில் எங்கு
நோக்கினும் சுத்தம், சுத்தம், பளிச்சிடும் சுத்தம்தான்!! (பிரார்த்தனைகளைப்
பத்திச் சொல்லாம, சுத்தத்தைப் பத்தி ப்ரஸ்தாபிக்கிறாளேன்னு நினைப்பீங்க.
சுத்தம்தானே பிரார்த்தனையின் முதல் பகுதி!! "Cleanliness is next to
Godliness" இல்லையா? )



பேபி... மாதாஜி!!! Hajj1


கூட்டம்,
கூட்டமாய் மக்கள். உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் ஆட்கள் உண்டு. மொழி,
உணவு, உடை, பழக்கவழக்கம் என்று எல்லாவற்றிலும் வேறுபட்டவர்களாயிருந்தும்,
ஒரே இறைவனை நோக்கிய ஒரே பிரார்த்தனை முறை எனப் பிரமிக்க வைத்தனர்!!
அரசாங்கக் குறிப்பின்படி, வெளிநாட்டினர் மட்டுமே 30 லட்சம்பேர் என்றாலும்,
மொத்தம் 35 லட்சம்பேருக்கும் அதிகம் இருந்திருக்கலாம். எனினும், அலங்கார
வளைவுகள், டிஜிட்டல் பேனர்கள், சீட்டுக்கச்சேரி, டாஸ்மாக் அலம்பல்கள்,
காதைச் செவிடாக்கும் ஸ்பீக்கர்கள், பெண்களைக் குறிவைக்கும் கும்பல்கள்,
கேமராக் கோணங்கள், நாராசக் காலர் ட்யூன்கள், முன்னுரிமை சிபாரிசுகள்,
முதல் மரியாதைகள், டொனேஷன் புக், உண்டியல் குலுக்கல்கள், பிரியாணிப்
பொட்டலங்கள் என்று கவனத்தைச் சிதறடிக்கும் எதுவும் இல்லாமல், மனதை
பிரார்த்தனையில் மட்டுமே ஒருமுகப்படுத்தத் தோதானச் சூழல்.



வருடாவருடம்
பெருகிவரும் புனிதப் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சவூதி
அரசு செய்யும் பிரம்மாண்டமான வசதிகள் வியப்பளிக்கின்றன. நெரிசலைத் தவிர்க்க
செய்யப்படும் அவர்களின் முயற்சிகள் பலனளித்து வருவதும் மகிழ்ச்சி. இந்த
வருடமும், வந்த இடத்தில் உடல்நலமில்லாமல் போன ஹஜ் பயணிகளுக்கு இலவசமாக மருத்துவ உதவி செய்திருக்கின்றனர்.
மருத்துவமனையில் படுக்கையில் இருப்பவர்களில் பலரை அரசே தன் செலவில்,
ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சர்களிலேயே ஊழியர்கள் துணையோடு ஹஜ் கிரியைகளை
நிறைவேற்ற உதவியுள்ளது. சும்மா இல்லை சவூதி அரசாங்கம் செல்வத்தில்
கொழிப்பது - தொட்டனைத் தூறும் மணற்கேணி!!



கவனத்தைக்
கவர்ந்த இன்னொரு விஷயம் - முதியவர்கள்!! நெகிழவும், பல சமயங்களில்
கலங்கவும் வைத்தனர். தம்பதியராய் வந்திருந்த முதியவர்கள், ஒருவருக்கொருவர்
கைப்பிடித்து ஆதரவாய் தாங்கிச் செல்வது கண்கொள்ளாக் காட்சி. தனியே
வந்திருந்த முதியவர்கள் - ஆண்களே பெரும்பாலும் - தட்டுத்தடுமாறிச்
செல்லும்போது நம்மைத் தவிக்கவும் வைக்கின்றனர். ஒருமுறை என்னருகே சென்ற
முதியவரொருவர், பெருந்தொலைவு நடந்த களைப்பினால் நிலைதடுமாறி விழப்போக, நான்
இருமுறை பிடித்துத் தூக்கிவிட்டும், தள்ளாடியவாறே நடந்து சென்றது இன்னும்
கண்களுக்குள்ளேயே நிற்கிறது. காலத்தே என் துணையோடு கடமையை நிறைவேற்ற வைத்த
இறைவனுக்கே எல்லாப் புகழும், நன்றியும்.



உடன்
வந்திருந்த என் மாமியாரை நாங்கள் வீல்சேரில் அழைத்துச்
செல்லும்போதெல்லாம், வழியில் காணும் பல முதியவர்களின் பார்வைகளில் ஏக்கம்
வெளிப்படையாகத் தெரியும். சிலர் என் கணவரைத் தட்டிக்கொடுத்து, அவர்கள்
மொழியில் பாராட்டவும் செய்தனர்.



அடுத்த
அதிசயம் - ஸம்ஸம் ஊற்று நீர்!! வந்திருந்த 35 மில்லியன் மக்களும்
திரும்பிச் செல்லும்போது, குறைந்த பட்சம் 10லி ஸம்ஸம் நீர் தம்மோடு
எடுத்துச் செல்வார்கள். மேலும், ஒவ்வொருவரும் அங்கிருக்கும் அனைத்து
நாட்களும் (10 முதல் 40 நாட்கள்) அந்நீரையே பருகவும் பயன்படுத்துவார்கள்.
எனினும் வற்றாத இறைவன் கருணையாய் அந்த ஊற்றும்!!



இன்னும்
எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்!! ஹஜ்ஜின் ஐந்து நாட்களில் மினா என்ற
இடத்தில் கூடாரத்தில் தங்க வேண்டும். ஜனத்திரள் காரணமாய், ஒருவருக்கு ஆறடி
இடமே கிடைக்கும். அதாவது படுத்துறங்க மட்டும்!! உலகில் நீ எவ்வளவு இடம்
சேர்த்தாலும், கடைசியில் தேவைப்படுவது ஆறடி நிலமே என்று உணர்த்துவது
போலிருந்தது. இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம்.
மொத்தத்தில், அந்த ஐந்து நாள் பரதேச வாழ்வு ஒரு பற்றற்ற நிலை வரவைக்கும்.



இதைச்
சொல்லும்போது சென்ற வாரம் பேசிய ஒரு தோழி கேட்டது நினைவுக்கு வருகிறது.
“ஹஜ்ஜுக்குப் போய்ட்டு வந்தப்புறம் கிட்டத்தட்ட ஒரு துறவு வாழ்க்கைத்தான்
வாழணுமாமே? டிவிகூடப் பார்க்கக் கூடாதாம். நீங்கவேற சின்ன வயசிலேயே
போய்ட்டீங்க. கஷ்டமாருக்குமே?” என்று கேட்டார்!! அவ்வ்வ்... விட்டா
என்னையும் “மாதாஜி” ஆக்கிடுவாங்க போலன்னு பதறி, ”அப்படிலாம்
இல்லை. ஹஜ்ஜுக்குப் போனாலும் போகலையின்னாலும் எப்பவுமே வாழ்க்கையில ஒரு
கட்டுப்பாடு இருக்கணும். நல்லது கெட்டது அறிஞ்சு நடக்கறது எப்பவுமே
அவசியம்தான்”னு அவசரமா விளக்கம் சொன்னேன்.



ஆனாலும், என் சின்னவன் “ம்மா, நீ இப்ப ஒரு நியூ பேபி மாதிரி, தெரியுமா?”வென்று கேட்டது, கூடுதல் கவனம் வேண்டுமென்பதையே உணர்த்தியது.




குறிப்பு:
ஒருவர் செய்த ஹஜ்ஜை இறைவன் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அவரது பாவங்கள்
மன்னிக்கப்பெற்று, அன்று பிறந்த குழந்தையைப் போல ஆகிவிடுவார் என்பது
நபிமொழி.




ஹுஸைனம்மா


முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10920
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum