தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இஸ்லாத்தின் பார்வையில் மீலாது விழா !!!

Go down

இஸ்லாத்தின் பார்வையில் மீலாது விழா !!!  Empty இஸ்லாத்தின் பார்வையில் மீலாது விழா !!!

Post by முஸ்லிம் Thu Feb 02, 2012 5:52 pm

இஸ்லாம்
என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தந்த வழிமுறைகள்தான். இது
நபி(ஸல்) அவர்கள் காலத்தோடு முழுமைப்படுத்தப்பட்டு விட்டது. வல்ல அல்லாஹ்
தன் திருமறையில்


இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்.
எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்காக
வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.(அல்குர்ஆன்: 5:3)



நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான
நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும்.
அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற
மாட்டார்கள். (இர்பான் பின் ஸாரியா(ரலி) அஹ்மத் 16519)



இப்படிப்பட்ட தெளிவான இஸ்லாமிய மார்க்கத்தில் இன்றைக்கு நபி(ஸல்) அவர்கள்
காட்டித் தராத எத்தனையோ புதுப்புது வழிமுறைகள், வழிபாடுகள் புகுந்து
விட்டன. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பித்அத்களை உருவாக்கி வைத்துள்ளனர்.


ரபியுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் போதும். ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும்
பிறை 1 முதல் 12 வரை மௌலூதுகள் ஓதி மீலாது விழா கொண்டாடி வருகின்றனர்.
நபி(ஸல்) அவர்களின் புகழைப் பாட வேண்டும். அவர்களின் மீது கொண்டுள்ள
நேசத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த விழாக்களை
கொண்டாடி வருகின்றனர்.


இந்த மீலாது விழாக்களில் ஊர்வலம் என்ற பெயரில் போதையால் மதி மயங்கியவர்களாக
கேடு கெட்ட வாசகங்களைப் பயன்படுத்தி கோஷமிடுவது, தெருவாரியாக வசூல் செய்து
மௌலூது, பாத்திஹா ஒதி நேர்ச்சை விநியோகிப்பது, அன்றைய தினம்
இசைக்கருவிகளுடன் பாட்டுக் கச்சேரி நடத்துவது இன்னும் பற்பல அனாச்சாரங்களை
ஊருக்கு ஊர் வித்தியாசமாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதைக் காண
முடிகிறது.




ஒரு முஸ்லிம் ஒரு காரியத்தைச் செய்கிறானென்றால், அவன் செய்யும்
அக்காரியத்திற்கு உரைக்கல்லாக அவன் குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின்
வாழ்வில் ஒரு முன்மாதிரியையும் வைத்து செயல்படவேண்டும். அப்போது தான் அந்த
செயலுக்கு நன்மை கிடைக்கும். இல்லையேல் அது தீமையாகவே அமைந்து விடும்.


இவர்கள் கொண்டாடும் இந்த மீலாது விழாவுக்கு மார்க்க அங்கீகாரம் உள்ளதா
என்றால் இல்லவே இல்லை. குர்ஆன், நபி(ஸல்) அவர்களுக்கு முன் சென்ற
நபிமார்களின் வரலாற்றை சொல்லிகாட்டும் போது யாருடைய பிறந்த நாளைப்
பற்றியும் கூறவேயில்லை. அதிசயமாகப் பிறந்தவர் என்ற அடிப்படையில் நபி ஈஸா
(அலை) அவர்களைப் பற்றிக் கூறும்போது


நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், நான் உயிருடன்
எழுப்பப்படும் நாளிலும் என் மீது நிம்மதி இருக்கிறது (என்றார்)
(அல்குர்ஆன்: 19:33)



என்று வல்ல அல்லாஹ் கூறுகின்றான். அதிலும் பிறந்த நாளுக்கு முக்கியத்துவம்
கொடுத்து விழா எடுக்க சொல்லவில்லையே. அதைப்போன்று நபி(ஸல்) அவர்கள், முன்
சென்ற நபிமார்கள் ஆதம், நூஹ், இப்ராஹிம் (அலை) மற்றும் பல நபிமார்களின்
வரலாற்றைக் கூறும்போது அவரவர் பிறந்த நாளைப்பற்றியும் அவைகளின்
முக்கியத்துவத்தைப் பற்றியும் கூறவே இல்லை.அவர்களுக்கு பிறந்த நாள்
கொண்டாடி நமக்கு முன்மாதிரி காட்டிடவும் இல்லை.


நபி(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் தன் பிறந்த நாளையோ, தன் பிள்ளைகளின்
பிறந்த நாளையோ தாமும் கொண்டாடியதில்லை. பிறரைக் கொண்டாடும்படி கூறவும்
இல்லை. மேலும், நபி(ஸல்) அவர்களை எல்லா அம்சங்களிலும் நூற்றுக்கு நூறு
பின்பற்றி வந்த நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களுடைய பிறந்த நாளுக்கு
முக்கியத்துவம் கொடுத்தார்களா? என்றால் அதுவுமில்லை. அதற்காக விழா
கொண்டாடவும் இல்லை. மாறாக, ஆண்டுக்கணக்கை எதிலிருந்து துவங்கலாம் என்ற
ஆலோசனை நடத்தும்போது நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளை அடிப்படையாக வைத்துத்
துவக்குவதை விட்டுவிட்டு, இஸ்லாத்தில் மிகவும் திருப்புமுனையாக அமைந்த
ஹிஜ்ரத் நிகழ்ச்சியை முன்வைத்தே துவக்கியுள்ளதை வரலாற்றில் காண முடிகிறது.


உலகத்திலுள்ள எத்தனையோ பேருக்கு பிறந்த நாள் கொண்டாடும்போது, அகில உலக
மக்களுக்கோர் அருட்கொடையாக வந்த இறுதித்தூதர் நபி(ஸல்) அவர்களுக்கு பிறந்த
நாள் கொண்டாடினால் என்ன? என்ற வாதத்தை சிலர் முன் வைக்கின்றனர். இது பற்றி
சற்று விரிவாகக் காண்போம்.


நபி(ஸல்) அவர்கள் அகிலத்திற்கோர் அருட் கொடையாக வல்லநாயன் அல்லாஹ் அருள்
செய்திருக்கிறான். அந்த அருட்கொடையான நபி(ஸல்) அவர்கள் தமது சொல், செயல்
வாழ்க்கை முறைகளால் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் தனிப்பெரும் அத்தாட்சியாக
தனித்து விளங்குகிறார்கள்.நபி(ஸல்) அவர்கள் நம்மிடையே இல்லாவிட்டாலும்
அவர்களது வாழ்வும் வழிகாட்டலும் இன்றளவும் இருக்கிறது. உலகம் உள்ளளவும்
இறைகிருபையால் ஜீவன்மிக்கதாக இருக்கும்.




அப்படிப்பட்ட மாமனிதர் அவர்கள்
ஏதோ ஒரு சில தினங்கள் மட்டும் புகழ்பாடுகிறோம் எனும் பெயரில் நினைவுக்
கூறப்படக் கூடியவரல்லர். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் ஆண் பெண் என
ஒவ்வொருவரும் தங்கள் உள்ளங்களாலும் செயல்களாலும் நினைவுக் கூறப்பட
வேண்டியவர்கள் நபி(ஸல்) அவர்கள். அந்தளவுக்கு மகத்தான ஒரு மனிதரின்
பிறந்தநாளை கொண்டாடுகிறோம் என்று கூறி அவர்கள் காட்டித் தராத ஒரு
வழிமுறையைக் கொண்டாடுவது நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவதாகுமா? அல்லது
அலட்சியப்படுத்துவதாகுமா? விழாக் கொண்டாட்டம் என்பதே ஒரு கொள்கையின், ஒரு
நல்ல மனிதரின் உண்மையான தன்மையையும், சிறப்பையும் மறக்கடிக்கச் செய்து
விட்டு, வீணான செயல்களையும், வீணான சிந்தனைகளையும் மேலோங்கச் செய்து
விடும். அதனால் தான் இஸ்லாம் இந்த விழாக் கொண்டாட்டங்களுக்கு
முக்கியத்துவம் தருவதேயில்லை.


கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய வல்ல அல்லாஹ் தன் திருமறையில்நீங்கள்
அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை
விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன். நிகரற்ற
அன்புடையோன் என்று கூறுவீராக! அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும்
கட்டுப்படுங்கள்! நீஙகள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப
மாட்டான் எனக் கூறுவீராக!( அல்குர்ஆன்: 3: 31-32)



இந்தக் குர்ஆன் வசனத்தின் மூலம் அல்லாஹ்வின் தூதரிடத்தில் தான் அழகிய
முன்மாதிரி உள்ளது. ஒரு மனிதன் அல்லாஹ்வை நேசிப்பது உண்மையாக இருந்தால்
அவன் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இதுவே இறைநேசத்தின் சத்தும், சாரமும் அடையாளமும் குறிக்கோளுமாகும்.


மாறாக, நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரம் இல்லாமல் நல்லது தானே,
சிறப்புதானே என்று நாமே நம் இஷ்டத்திற்கு உருவாக்கும் எல்லாச் செயல்களும்
பித்அத்தான நூதன வழிகேடு என்றும் அதுவே நரகத்திற்கு கொண்டு சேர்க்கும்
செயலென்று அல்லாஹ்வும், அவனுடைய தூதர் நபி(ஸல்) அவர்களும் கண்டித்துள்ளதை
காணலாம். அந்த அடிப்படையில் மௌலூது,மீலாதுவிழா போன்ற நிகழ்ச்சிகள்நடத்துவது
அழகிய மார்க்கத்தில் புதிதாக சேர்த்த வழிமுறையாகும்.


வல்ல அல்லாஹ் தன் திருமறையில் இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை
வாங்கிக் கொள்ளுங்கள். எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதை விட்டு விலகி
கொள்ளுங்கள்.அல்லாஹ்வை அஞ்சுங்கள் அல்லாஹ் கடுமையாக
தண்டிப்பவன்.(அல்குர்ஆன்: 59:7)



அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை
கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம்
கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர்
தெளிவாக வழி கெட்டு விட்டார்.(33:36)



மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் நமது மார்க்கத்தில் இல்லாத
ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்பட
வேண்டியதே!(ஆயிஷா(ரலி) புகாரி 2697)



நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும் (ஆயிஷா (ரலி) முஸ்லிம் 3243)



அனைத்து பித்அத்தான செயல்களுக்கும் சாட்டையடியாக அமைந்த மாநபி(ஸல்)
அவர்களின் எச்சரிக்கை இவைகள்: செய்திகளில் மிகவும் உண்மையானது
அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது(ஸல்)
அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் கெட்டது புதிதாக உருவானவையாகும்.
புதிதாக உருவானவை அனைத்தும் பித்அத்களாகும்.ஒவ்வொரு பித்அத்தும்
வழிகேடாகும். ஓவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். (ஜாபிர்
(ரலி) நஸயி 1560)



என் உம்மத்தினர் அனைவரும் சுவர்க்கத்தில் நுழைவர். விலகிக்கொண்டவனைத்
தவிர!. அப்போது நபி(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! விலகிக்
கொண்டவன் யார்? என வினவினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் எனக்கு யார்
வழிப்பட்டானோ அவன் சுவர்க்கம் செல்வான். யார் எனக்கு மாறு செய்தானோ அவன்
விலகிக் கொண்டவன் ஆவான் என பகர்ந்தார்கள். (அபூஹூரைரா(ரலி) புகாரி)



அல்லாஹ்வின் தூதரின் கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்குத் துன்பம்
ஏற்படுவதையோ. துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளவும்.
(அல்குர்ஆன் 24: 63)


மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதிஸ்களின் மூலம் அல்லாஹ்வும்,
அவனது தூதரும் கட்டளையிடாத எந்தவொரு செயலுக்கும் மார்க்கத்தில் இடமில்லை
என்பது தெளிவாக நமக்கு எடுத்துரைக்கையில் பிறந்த நாள் விழா போன்ற
கொண்டாட்டங்கள் அனைத்தும் மார்க்கத்தில் புதிதாக திணிக்கப்பட்ட யூத,
கிருஸ்தவ நடைமுறை செயல்கள் என்பதை புரிந்துக் கொண்டு குர்ஆன் மற்றும்
நபிவழியில் நடக்க முயற்சி செய்ய வேண்டும்.


உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை,அவரது குழந்தைகள், ஏனைய மக்கள்
அனைவரையும் விட நான் மிகவும் பிரியத்திற்குரியவராக ஆகும் வரை அவர் உண்மையான
ஈமான் கொண்டவராக மாட்டார். (அனஸ்(ரலி) புகாரி 15)



இதன் மூலம் உண்மையான நேசம் என்பது நபி(ஸல்) அவர்களின் மீது அன்பு
கொண்டுள்ளோம் என்பதற்கு அடையாளம் அவர்கள் காட்டிய வழியைப் பின்பற்றி தாமும்
நடந்து, அதை மற்றவர்களுக்கும் எடுத்து போதிப்பதாகும்.


எனவே நபி(ஸல்) அவர்களை ஒரு சில நாட்கள் மட்டும் எண்ணிப் பார்க்காமல்
அவர்களுடைய வாழ்க்கையையும் அவர்களுடைய நற்பண்புகளையும் நம்முடைய வாழ்க்கை
நெறியாகப் பின்பற்றி உலகம் முழுமைக்கும் பரப்புவோமாக! இம்மையிலும்
மறுமையிலும் இறைவன் நம்மை நேசித்து அவன் மன்னிப்பைப் பெற இதுவே சிறந்த வழி.


PDM-TNTJ.NET
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10898
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum