மத்திய ஜெரூசலத்தில் மாபெரும் யூத வழிபாட்டுத்தலம்
மத்திய ஜெரூசலத்தில் மாபெரும் யூத வழிபாட்டுத்தலம்
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள புனித ஜெரூசல நகரத்தின் மத்திய பகுதியில் மாபெரும் யூத வழிபாட்டுத் தலமொன்றை நிறுவுவதற்கான அனுமதியை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் வழங்கியுள்ளமையைக் கண்டித்து காஸாவில் உள்ள சமய விவகார அமைச்சகம் தன்னுடைய கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
ஜெரூசலம் முதலான இஸ்லாமியப் புனிதத் தலங்களைக் கையகப்படுத்தி, அவற்றிலுள்ள தொல்பொருட் சிறப்பு வாய்ந்த அம்சங்களை முற்றாக அழித்தொழித்து யூதமயமாக்கும் சதித்திட்டத்தின் படிப்படியான நடவடிக்கைகளில் ஒன்றாகவே இத்தகைய யூத வழிபாட்டுத்தலங்களை நிறுவும் முயற்சியும் அமைந்துள்ளது என அந்த அமைச்சகம் கருத்து வெளியிட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.11.2010) காஸாவின் சமய விவாகார அமைச்சர் தாலிப் அபூ ஷஆர் மேலும் கூறுகையில், சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் புனித மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு அருகில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை கராப் எனும் யூத வழிபாட்டுத்தலத்தை நிறுவியபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் அரபு-இஸ்லாமிய உலகமும் சர்வதேச அமைப்புக்களும் மௌனம் சாதித்தன.
இதனையே தமக்குரிய அங்கீகாரமாக எடுத்துக்கொண்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை மேலும் பல சட்டவிரோத வழிபாட்டுத் தலங்களை அமைப்பதில் முனைப்போடு ஈடுபட்டு வருகின்றது என்று சுட்டிக்காட்டினார். கராப் எனும் யூத வழிபாட்டுத்தலம் யூத மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 40 000 பேரைத் தன்பால் ஈர்த்துள்ளது என்று அபூ ஷஆர் தெரிவித்துள்ளார்.
தஃபூராத் இஸ்ரேல் என்ற என்ற பெயரில் அமைக்கப்படவுள்ள இப்புதிய வழிபாட்டுத்தலத்தை நிறுவுவதற்கு யூத அபிவிருத்திக் கம்பெனி ஒன்று 40 மில்லியன் இஸ்ரேலிய ஷெக்கல்களை முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜெரூசல அமைப்பின் தலைவராகச் செயற்பட்டுவரும் அமைச்சர் அபூ ஷஆர் மேலும் குறிப்பிடுகையில், ஜெரூசலத்தின் எந்தப் பகுதியில் இருந்து பார்த்தாலும் பளிச்சென்று தெரியக்கூடிய வகையில் இந்த யூதக் கோவில் அமைக்கப்படவுள்ளது என்றும், சுமார் 26 மீற்றர் உயரமுள்ள இந்த யூத வழிபாட்டுத்தலம் முழுமையாகக் கட்டிமுடிக்கப்பட சுமார் ஐந்து வருடகாலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நன்றி : இந்நேரம்
» மோடியை கைது செய்யக் கோரி சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
» சமூக வலை தளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சி
» ஒ.பி.சியில் சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு: மத்திய அரசின் அறிவிக்கை வெளியீடு
» மத்திய காஸாவில் இஸ்ரேலிய அடாவடி: சிறுவன் படுகாயம்!