விக்கிலீக்ஸ்: லஷ்கரைவிட இந்து தீவிரவாதம் அபாயகரமானது!
விக்கிலீக்ஸ்: லஷ்கரைவிட இந்து தீவிரவாதம் அபாயகரமானது!
பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்களை விட இந்தியாவில் அதிகரித்து வரும் இந்து தீவிரவாத அமைப்புகளால்தான் இந்தியாவுக்கு பேராபத்து உள்ளது என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிமோதி ரோமரிடம் ராகுல் காந்தி கூறியதாக விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் அளித்த விருந்தில் கலந்து கொண்ட டிமோதி ரோமரை சந்தித்தபோது ராகுல் இவ்வாறு கூறியதாக ரோமர், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பிய தகவலில் தெரிவித்துள்ளார்.
இந்த விருந்தில் டிமோதிக்கு அருகில் அமர்ந்திருந்த ராகுல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றி கூறினார். இந்துக்களிலும் முஸ்லிம்களிலும் தீவிரவாத சிந்தனை அதிகரித்து வருவது குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்திய முஸ்லீ்ம்களில் சிலர் ஆதரவாக உள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன. இருந்தாலும், இந்தியாவில் அதிகரித்து வரும் இந்து தீவிரவாதம், இந்து தீவிரவாத அமைப்புகளின் வளர்ச்சி அபாயகரமானதாக இருக்கிறது என்றும் ராகுல் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், முஸ்லிம் தீவிரவாதத்தை விட இந்து தீவிரவாதம்தான் மிகப் பயங்கரமானதாக இருக்கும் என நான் கருதுகிறேன். முஸ்லீம் சமுதாயத்தினருடன் மோதலில் ஈடுபடுவது, பதட்டத்தை ஏற்படுத்துவது என்று இந்து தீவிரவாத அமைப்புகள் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவுக்குள்ளேயே வளர்ந்து வரும், அதிகரித்து வரும் இந்த தீவிரவாத செயல்கள், பாகிஸ்தானிலிருந்து வரும் தாக்குதல்கள், பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய தீவிரவாத குழுக்களை விட இந்தியாவுக்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்த வல்லவை என்று நான் கருதுகிறேன். எனவே இதுகுறித்து கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது என்று என்னிடம் ராகுல் தெரிவித்தார் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நேரம்
» தடை மீறி ஊர்வலம்: இந்து மகா சபை தொண்டர்கள் கைது!
» தீவிரவாதம் என்ற வார்த்தைக்கு புதிய இலக்கணம் வகுக்க மத்திய அரசு முடிவு
» மெக்கா மசூதி குண்டுவெடிப்பு-2 இந்து அமைப்பினர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
» விசுவ இந்து பரிஷத்துடனான உறவை நிர்மோகி அகாரா முறித்தது!