தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பெருநாள் தொழுகையின் சட்டங்கள்

Go down

பெருநாள் தொழுகையின் சட்டங்கள் Empty பெருநாள் தொழுகையின் சட்டங்கள்

Post by முஸ்லிம் Tue Aug 30, 2011 8:50 pm

இஸ்லாமிய மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்டுள்ள‌ வருடத்தின் இரண்டு பெருநாட்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். அண்ணல் நபி(ஸல்) அவர்களும் இந்த நாட்களைப் பற்றி சிலாகித்துக் கூறியுள்ளார்கள்.

"நபி(ஸல்)அவர்கள் மதீனா நகருக்கு வருகைத் தந்தபோது மதீனாவாழ் மக்களுக்கு இரண்டு (திரு)நாட்கள் இருந்தன. அவ்விரண்டு நாட்களிலே மக்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவார்கள். அப்போது நபி(ஸல்)அவர்கள் "இவ்விரண்டு நாட்களைவிடச் சிறந்த (இரண்டு) நாட்களை உங்களுக்கு இறைவன் ஏற்படுத்தியுள்ளான். அவை குர்பானிப் பெருநாள், மற்றும் ஃபித்ரு பெருநாளாகும்" என்றார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரலி; நூல்: அபூதாவூத், நஸாயீ

இந்தப் பெருநாட்களை நாம் கொண்டாடத் துவங்குவதே தொழுகையைக் கொண்டுதான்! பருவமடைந்த ஒவ்வொரு ஆண், பெண்ணும் பெருநாள் தொழுகைத் தொழுவது அவசியமானதாகும்.

பெண்களுக்கும் அவசியமான பெருநாள் தொழுகை


பெருநாள் தொழுகையின் சட்டங்கள் 3
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதை பொதுவாக அனுமதித்திருந்தாலும், அவர்கள் பள்ளியில்தான் தொழுதாக வேண்டும் என்று கட்டாயமாக்க‌வில்லை. ஆனால் வேறெந்த தொழுகைக்கும் வலியுறுத்தாத அளவுக்கு பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாகக் கலந்துக் கொள்ளவேண்டும் என்ற உத்தரவை நபியவர்கள் பிறப்பித்துள்ளார்கள்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் மைதானத்திற்கு) புறப்படச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் (மட்டும்) தொழுமிடத்தை விட்டு விலகியிருப்பார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி); நூல்: புகாரி(324, 351, 974, 980, 981, 1652)

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் மைதானத்திற்கு) புறப்படச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் மக்களுக்குப் பின்னால் இருக்க வேண்டும். அன்றைய நாளின் பரக்கத்தை எதிர்நோக்கி அவர்களுடன் சேர்ந்து இவர்களும் தக்பீர் கூறவேண்டும். அவர்களோடு இவர்களும் துஆச் செய்ய வேண்டும் என்றும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி); நூல்: புகாரி(971)

பெருநாளுக்கென ஒரு பரக்கத் இருக்கின்றது. அந்த நாள் ஆண்களோடு சேர்ந்து பெண்களும் (மாதவிடாய்ப் பெண்களும்) தக்பீர் சொல்ல வேண்டும். ஆண்கள் துஆச் செய்யும்போது பெண்களும் தங்களுக்காக துஆச் செய்யவேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது. மாதவிடாய்ப் பெண்கள் தொழுகையைத் தவிர மற்ற காரியங்களில் கலந்துக் கொள்ளவேண்டும்.

ஜமாஅத் தொழுகை, ஜும்ஆத் தொழுகை போன்ற கூட்டுத் தொழுகைகளில் பெண்கள் பங்குக் கொள்ளாமல் தமது வீடுகளிலேயே தனியாகத் தொழுதுக் கொள்வதற்கு பெண்களுக்குச் சலுகை வழங்கியுள்ள இஸ்லாம், பெருநாள் தொழுகையில் மட்டும் பெண்கள் கண்டிப்பாகக் கலந்துக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆக, மற்ற தொழுகைகளைவிட பெருநாள் தொழுகைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது, இத்தொழுகையின் அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது.

தொழுகை நேரம்

"இன்றைய தினத்தில் நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கின்றாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார்" என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: பர்ராஃ இப்னு ஆஸிப்(ரலி); நூல்: புகாரி (951, 965, 968, 976, 5545, 5560)

மேற்கண்ட ஹதீஸ் பெருநாள் தினத்தில் முதல் காரியமாக தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. பொதுவாக சுபுஹு தொழுகைக்குப் பின்னர் சூரியன் நன்கு வெளிப்படும் வரை தொழுவதற்குத் தடை உள்ளதால், அந்த நேரம் முடிந்தவுடன் பெருநாள் தொழுகையின் நேரம் துவங்கி விடுகின்றது.

சுபுஹுக்குப் பின் சூரியன் உதித்துப் பிரகாசிக்கின்ற வரை தொழுவதையும், அஸருக்குப் பின் சூரியன் மறைகின்ற வரை தொழுவதையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி); நூல்: புகாரி (581)

ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான‌ இடங்களில் நீண்ட நேரம்வரை தாமதப்படுத்தி பெருநாள் தொழுகையைத் தொழுகின்றார்கள். இது தவறாகும். அதுவுமில்லாமல், பெருநாள் தொழுகை மைதானத்தில் தொழவேண்டிய ஒரு தொழுகையாக இருப்பதால், தொழுகையைத் தாமதப்படுத்தும்போது உச்சி வெயிலில் நின்று பெருநாள் தொழுகையைத் தொழவேண்டிய நிலைக்கு மக்கள் ஆளாகிறார்கள்.

"கடுமையான வெப்பம் நரக வெப்பத்தின் வெளிப்பாடாகும். எனவே வெப்பம் கடுமையாகும்போது தொழுகையை (வெப்பம் தணியும் வரை) தாமதப்படுத்துங்கள்" என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர்(ரலி); நூல்: புகாரி(534, 537, 538, 539)

பள்ளிவாசலில் சென்று தொழவேண்டிய கடமையான தொழுகைகளைக் கூட வெயிலின் கடுமையைக் காரணம் காட்டி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தாமதப்படுத்துமாறு கட்டளையிட்டு, மக்கள் சிரமப்படக் கூடாது என்பதில் அந்த அளவுக்குக் கவனமாக இருந்துள்ளார்கள். எனவே நபிவழியைப் பின்பற்றித் தொழுவது என்றால் மைதானத்தில்தான் இத்தொழுகை நிறைவேற்றப்பட வேண்டும். மைதானத்தில் மக்கள் வெயிலைத் தாங்க முடியாத நேரத்தில் தொழுவது மேற்கண்ட நபிவழிக்கு முரணாக அமைகிறது.

எனவே பெருநாளன்று திடலில் தொழும்போது மக்களை வெயில் தாக்கும் என்பதால், அதிகாலையிலேயே பெருநாள் தொழுகையை முடித்துவிட வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டியுள்ளது.

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) 'முஸல்லா' என்ற (ஈத்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்களது காரியங்களில் முதல் காரியமாக தொழுகையைத் துவக்குவார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி); நூல்கள்: புகாரி(956), முஸ்லிம்(1612)

இந்த ஹதீஸிலும், இது போன்ற பல்வேறு ஹதீஸ்களிலும் பெருநாள் தொழுகையை காலையில் முதல் காரியமாக நிறைவேற்றவேண்டும் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளதால், சூரியன் முழுமையாக வெளிப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழுது விடுவதுதான் நபிவழியில் முறையான‌ செயலாகும்.

பாங்கு, இகாமத் உண்டா?

நோன்புப் பெருநாளிலும், ஹஜ் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை.
அறிவிப்பவர்கள்: இப்னு அப்பாஸ்(ரலி), ஜாபிர்(ரலி); நூல்: புகாரி

முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மற்றொரு ஹதீஸில் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை என்று ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள். எனவேபெருநாள் தொழுகைக்கு பாங்கோ, இகாமத்தோ இல்லை.

தொழும் முறையும் தக்பீர்களும்:-

நிய்யத்:

பெருநாள் தொழுகை மற்ற தொழுகைகளைப் போன்றதுதான் என்றாலும் இந்தத் தொழுகையில் அதிகப்படியான சில அம்சங்கள் உள்ளன. அவற்றிலும் நபி வழியல்லாத‌ பல்வேறு முறைகளை மக்கள் கடைப்பிடிக்கிறார்கள். அவற்றையெல்லாம் தவிர்த்து நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த அம்சங்களை மட்டும் நம் தொழும் முறைகளாக‌ அமைத்துக் கொள்ளவேண்டும்.

பெருநாள் தொழுகைக்காக நின்றவுடன் இமாம், பெருநாள் தொழுகைக்கான'நிய்யத்' சொல்லிக் கொடுக்கும் வழக்கம் நம் மக்களிடத்தில் இப்போதும் உள்ளது. மனதால் எண்ணுவதுதான் நிய்யத் ஆகுமே தவிர‌, வாயால் மொழிவதல்ல. எந்த வணக்கத்தில் ஈடுபட்டாலும் அதில் ஈடுபடும் சமயம் அந்த வணக்கத்தைப் பற்றிய‌ எண்ணம் இருப்பது அவசியமாகும். அதுதான்'நிய்யத்' என்பதாகும். மேலும் வாயால் சொல்வது நபிவழியும‌ல்ல!

தக்பீர்கள்:

பெருநாள் தொழுகையில் கூடுதலான தக்பீர்களை கூறும்படி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே, பெருநாள் தொழுகை ஏனைய தொழுகைகளைப் போன்றே தொழப்பட்டாலும் சாதாரண தொழுகைகளில் சொல்லப்படும் வழக்கமான தக்பீர்களை விட இந்தத் தொழுகையில் அதிகப்படியாக பன்னிரண்டு தக்பீர்கள் சொல்லப்பட வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு பின் ஆஸ்(ரலி); நூல்கள்: திர்மிதி, அபூதாவூத்

மேற்கண்ட ஹதீஸின் மூலம் இரண்டு ரக்அத்களைக் கொண்ட இத்தொழுகையில், முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களுமாக மொத்தம் 12 தக்பீர்கள் சொல்லவேண்டும் என்பதை விளங்குகிறோம். அதாவது, முதல் ரக்அத்தில் 'அல்லாஹும்ம பாயித் பைனீ...' அல்லது 'வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ.....' போன்ற துஆக்களில் ஏதேனும் ஒன்றை ஓதிய பின்னர், 'அல்லாஹு அக்பர்' என்று இமாம் ஏழு முறை தக்பீர்கள் கூற வேண்டும். பின்பற்றித் தொழுபவர்களும் ஏழு முறை சப்தமின்றி தக்பீர்கள் கூற வேண்டும். பிறகு 'சூரத்துல் பாத்திஹா' மற்றும் துணை சூராக்கள் கொண்ட கிராஅத் ஓதிவிட்டு ருகூவு, சுஜூத்களை மற்ற தொழுகையில் செய்வதைப் போன்று செய்யவேண்டும்.

பிறகு இரண்டாம் ரக்அத்திற்கு எழுந்தவுடன் பாத்திஹா சூரா ஓதுவதற்கு முன்னர் இமாம் ஐந்து தடவை 'அல்லாஹு அக்பர்' என்று கூறவேண்டும். பின்பற்றித் தொழுபவர்களும் அதேபோல் சப்தமின்றி ஐந்து தடவை 'அல்லாஹு அக்பர்' என்று கூற வேண்டும். அதற்கு பிறகு முதல் ரக்அத்தில் சொன்னதுபோலவே செய்து தொழுகையை முடிக்க வேண்டும்.


Last edited by முஸ்லிம் on Tue Aug 30, 2011 8:51 pm; edited 1 time in total
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

பெருநாள் தொழுகையின் சட்டங்கள் Empty Re: பெருநாள் தொழுகையின் சட்டங்கள்

Post by முஸ்லிம் Tue Aug 30, 2011 8:50 pm

தக்பீரின்போது கைகளை உயர்த்தவேண்டுமா?

'தக்பீர்' என்ற சொல்லை 'தக்பீர் கட்டுதல்' என்ற அர்த்தத்தில் மக்கள் தவறாக விளங்கியிருப்பதால், ஒவ்வொரு தக்பீருக்கும் மக்கள் கைகளை அவிழ்த்துக் கட்டும் வழக்கம் இருந்து வருகின்றது. ஆனால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவ்வாறு கைகளை உயர்த்தியதாக எந்த ஹதீசும் இல்லை.

'தஹ்லீல்' என்றால் 'லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுதல்'என்பதும், 'தஸ்பீஹ்' என்றால் 'சுப்ஹானல்லாஹ் என்று சொல்லுதல்'என்பதும், 'தஹ்மீத்' என்றால் 'அல்ஹம்துல்லாஹ் என்று சொல்லுதல்'என்பதுதான் பொருள்.

இதே போல் 'தக்பீர்' என்றால் 'அல்லாஹு அக்பர் என்று சொல்லுதல்'என்றுதான் பொருளாகும். உதாரணமாக, தொழுகைக்குப் பிறகு 33 தடவை தக்பீர் சொல்ல வேண்டும் என்றால், 33 தடவை கைகளை நெஞ்சின் மீது அவிழ்த்துக் கட்டுதல் என்று விளங்கமாட்டோம். இதுபோன்றுதான் 7+5 தக்பீர்கள் சொல்வார்கள் என்பதற்கு கைகளை அவிழ்த்துக் கட்டுதல் என்று பொருள் கொள்ளக்கூடாது. 7+5 தடவை 'அல்லாஹு அக்பர்' என்று கூற வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். எனவே முதல் தக்பீரின் போது மட்டும் கைகளை உயர்த்தி நெஞ்சில் கட்டிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு கைகளைக் கட்டிய நிலையிலேயே (கைகளை உயர்த்தவோ, அவிழ்க்கவோ செய்யாமல்) 'அல்லாஹு அக்பர்' என ஏழு தடவை கூற வேண்டும். இரண்டாம் ரக்அத்திலும் கைகளைக் கட்டிய நிலையிலேயே ஐந்து தடவை 'அல்லாஹு அக்பர்' என்று கூறவேண்டும். மேலும் கைகளை உயர்த்தவோ, அவிழ்க்கவோ நபி வழியில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும்.

தக்பீர்களுக்கிடையில் திக்ருகள் சொல்லவேண்டுமா?

சில பகுதிகளில், பெருநாளுக்கென்று கூடுதலாக சொல்லப்படும் இந்தக் தக்பீர்களுக்கு இடையில் 'சுப்ஹானல்லாஹி வல்ஹம்துல்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ்' என்ற திக்ரை சொல்லவேண்டும் என்று கூறுகின்றார்கள். அவ்வாறு ஓதவேண்டும் என எந்த ஒரு திக்ரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. எனவே இடையில் எதையும் ஓதக் கூடாது.

எந்த சூராக்களை ஓதுவது சிறந்தது?

பெருநாள் தொழுகையில் தக்பீர்கள் கூறிய பின் சூரத்துல் ஃபாத்திஹா ஓதிவிட்டு ஓதக்கூடிய துணை சூராக்கள் குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா' (அத்தியாயம்: 87), 'ஹல் அதாக ஹதீசுல் காஷியா' (அத்தியாயம்: 88) ஆகிய அத்தியாயங்களை ஓதுபவர்களாக இருந்தனர். பெருநாளும், ஜும்ஆவும் ஒரே நாளில் வந்துவிட்டால் அவ்விரண்டிலுமே மேற்கண்ட அத்தியாயங்களை ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்(ரலி); நூல்:முஸ்லிம்(1452)

அபூ வாகித் அல்லைஸி(ரலி)யிடம், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஹஜ் பெருநாள் தொழுகையிலும், நோன்புப் பெருநாள் தொழுகையிலும் என்ன ஓதுவார்கள்? என்று உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள் கேட்டபோது, அவ்விரு தொழுகைகளிலும் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' (அத்தியாயம்: 50) 'இக்தர பதிஸ் ஸாஅ' (அத்தியாயம்: 54) ஆகிய அத்தியாயங்களை ஓதுவார்கள் என்று பதிலளித்தார்கள்.
நூல்: முஸ்லிம் 1477

மேற்கண்ட ஹதீஸ்கள் என்னென்ன அத்தியாயங்களை பெருநாள் தொழுகையில் ஓதவேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றன. இவ்வாறு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஓதிய சூராக்களை நபித்தோழர்கள் அறிவிப்பதிலிருந்து கிராஅத்தைச் சப்தமிட்டு ஓதவேண்டும் என்பதும் தெளிவாகின்றது.

பெருநாள் தொழுகைக்கு முன்/பின் சுன்னத் உண்டா?

சில ஊர்களில் பெருநாள் தொழுகைக்கு முன் சுன்னத் என்ற பெயரில் இரண்டு ரக்அத் தொழும் வழக்கம் இருந்து வருகின்றது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய, நபிவழிக்கு மாற்றமான நடைமுறையாகும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் முஸல்லா என்ற திடலுக்குச் செல்வார்கள். அவர்கள் முதன் முதல் (பெருநாள்) தொழுகையைதான் துவக்குவார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல் குத்ரீ (ரலி); நூல்: புகாரி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதற்கு முன்பும், பின்பும் அவர்கள் எதையும் தொழவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி); நூல்:புகாரி

முதலில் தொழுகையா? 'குத்பா' என்ற‌ உரையா?

ஜும்ஆ தொழுகையைப் போன்றே பெருநாள் தொழுகையும் இரண்டு ரக்அத்துகள் தொழுகையுட‌ன், சொற்பொழிவும் அடங்கியதாகும். ஜும்ஆவின்போது முதலில் இமாம் உரை நிகழ்த்திவிட்டுப் பின்னர் தொழுகை நடத்தவேண்டும். ஆனால் பெருநாள் தொழுகையில் முதலில் தொழுகை நடத்திவிட்டு அதன் பிறகு இமாம் உரை நிகழ்த்த வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடன் நான் பெருநாள் தொழுகையில் பங்கு எடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி); நூல்: புகாரி

நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள், அபூபக்கர்(ரலி), உமர்(ரலி) ஆகியோர் இரு பெருநாட்களிலும் உரை நிகழ்த்துவதற்கு முன்பு தொழுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி); நூல்:புகாரி (962)

முதலில் தொழவேண்டும், அதன் பிறகுதான் உரை நிகழ்த்தவேண்டும் என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறியலாம். ஆனால் இன்று சில‌ ஊர்களில் தொழுவதற்கு முன்பாக ஒரு அரை மணி நேர உரை முதலில் நடைபெறும். அதன் பிறகு தொழுகையும், அதற்குப் பிறகு இரண்டு உரைகளும் நடைபெறும். இது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைக்கு மாற்றமான செயலாகும். எனவே, பெருநாள் தொழுகை முடிந்ததும் மக்களுக்கு இமாம் உரையாற்றுவதுதான் நபிவழியாகும்.

ஒரே உரையின் இடையில் இமாம் அமரவேண்டுமா?

இரு பெருநாட்களிலும் நிகழ்த்தப்படக்கூடிய உரையின்போது இடையில் உட்காருவதற்கு நபி வழியில் ஆதாரமில்லை. இரு உரைகளுக்கு இடையில் பிரித்துக் காட்டும் விதமாக அமர்வது நபிவழி (சுன்னத்) என்று இமாம் ஷாபி அறிவிப்பதாக ஒரு செய்தி கூறப்படுகின்றது. அந்தச் செய்தியை அறிவிக்கும் உபைதுல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு உத்பா என்பவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவரல்ல என்பதால், இந்த ஹதீஸ் ஏற்கத்தக்க முடியாத வகை ஹதீஸ்களில் சார்ந்தவையாகிவிடுகிறது. இதுபோன்ற இன்னும் ஒரு பலகீனமான ஹதீஸும் உள்ளதே தவிர, ஆதாரப் பூர்வமான எந்த ஹதீஸும் இல்லாததால், ஜும்ஆவைப் போன்று இரண்டு உரைகள் ஆற்றக்கூடாது என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மிம்பர் (மேடை) உண்டா?


பெருநாள் தொழுகையின் சட்டங்கள் 4

வழக்கமாக ஜும்ஆவின் இரு உரைகளும் பள்ளியில் உள்ள மிம்பரில் ஆற்றப்படும். ஆனால் பெருநாள் தொழுகையில் இமாம் தரையில் நின்றுதான் உரையாற்ற வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாளன்று தரையில் நின்று உரையாற்றினார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ(ரலி); நூல்:இப்னு குஸைமா

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்கு) தயாராகி தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் (உரையை) முடித்து, (அங்கிருந்து) நகர்ந்து பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடைய கை மீது சாய்ந்துக் கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி); நூல்: புகாரி(978)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தரையில் நின்று உரையாற்றியுள்ளதால் நாமும் பெருநாள் தொழுகையில் மிம்பர் பயன்படுத்தக்கூடாது.

பெண்களுக்குத் தனியாகப் பிரச்சாரம் செய்யவேண்டுமா?

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தாம் பேசியது பெண்களுக்குக் கேட்கவில்லை என்று கருதியதும் பெண்கள் பகுதிக்கு வந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: புகாரி(98)

இமாம் பேசுவது பெண்களுக்கு எட்டிவிடுமானால் அந்த உரையே போதுமானதாகும். இல்லையேல் பெண்கள் பகுதிக்கு வந்து உரையாற்ற வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

பெருநாள் குத்பாவைக் கேட்பதன் அவசியம்

விரும்பினால் பெருநாள் உரையைக் கேட்கலாம், இல்லையேல் கேட்க வேண்டியதில்லை என்ற கருத்துப்பட வரக்கூடிய ஹதீஸ்கள் ஆதாரமற்றவையாகும்.

கன்னிப் பெண்கள், மாதவிடாய்ப் பெண்கள் உட்பட அனைவரும் வந்து இந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதன் பெருநாள் உரையை கேட்பதற்காகதானே தவிர மைதானத்திற்கு வந்து பேசிக் கொண்டிருப்பதற்காக அல்ல! எனவே பெருநாள் உரையின் போது பேசிக் கொண்டிருக்காமல் நபித்தோழர்கள் எப்படி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் உரையை அமர்ந்து அமைதியாகக் கேட்டார்களோ அதுபோல் நாமும் (ஜும்ஆ உரயைப் போன்றே) அமைதியாக இமாமின் பெருநாள் உரையைக் கேட்க வேண்டும்.

பெருநாள் பிரார்த்தனை

பெருநாள் தொழுகையும், உரையும் முடிந்ததும் நாம் உடனே கலைந்து விடாமல் ஆண்களும், மாதவிடாய்ப் பெண்கள் உட்பட அனைத்துப் பெண்களும் திடலில் அவரவருக்குரிய இடத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யவேண்டும். திடலில் கேட்கும் துஆவிற்கு முக்கியத்துவமும் மகத்துவமும் உள்ளது.

பெருநாள் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டும் எனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி); நூல்:புகாரி(971)

இந்த ஹதீஸில் பெருநாளைக்கு என்று ஒரு பரக்கத்தும், புனிதமும் இருப்பதாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அந்த பாக்கியத்தை நாம் இழந்து விடக்கூடாது என்பதற்காக பெருநாள் உரை முடிந்ததும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஜும்ஆவும் பெருநாளும்

ஜும்ஆத் தொழுகை கடமை என்றாலும் கூட, ஜும்ஆ தினத்தில் பெருநாள் வந்தால் ஜும்ஆவிற்குப் பதிலாக பெருநாள் தொழுகையே போதுமானது என்று இஸ்லாம் கூறுகின்றது. ஆனால், அப்படி ஜும்ஆ தினத்தில் பெருநாள் வரும்போது, நாம் விரும்பினால் பெருநாள் தொழுகையைத் தொழுதுவிட்டு பிறகு ஜும்ஆத் தொழுகையையும் தொழுதுக் கொள்ளலாம். விரும்பினால் அன்றைய தினம் பெருநாள் தொழுதுவிட்டு ஜும்ஆத் தொழுகையை தொழாமலும் இருக்க‌லாம். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இந்த இரண்டு விதமான நடைமுறைகளுக்கும் சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும், ஜும்ஆவிலும் 'ஸப்பி ஹிஸ்ம ரப்பிகல் அஃலா' என்ற அத்தியாயத்தையும், 'ஹல் அதாக ஹதீஸுல் காஷியா' என்ற அத்தியாயத்தையும் ஓதுவார்கள். ஒரே நாளில் பெருநாளும், ஜும்ஆவும் வந்துவிட்டால் இரு தொழுகைகளிலும் அந்த இரு அத்தியாயங்களையும் ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்(ரலி); நூல்:முஸ்லிம்(1452)

இந்த ஹதீஸிலிருந்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஒரே நாளில் வந்த‌ பெருநாள் தொழுகையையும், ஜும்ஆத் தொழுகையையும் தொழுது இருக்கிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ள முடிகிறது.

'இன்றைய தினம் உங்களுக்கு இரண்டு பெருநாட்கள் வந்துள்ளன. யார் இந்தப் பெருநாள் தொழுகையைத் தொழுகிறாரோ அவர் ஜும்ஆத் தொழாமல் இருக்கலாம். ஆனால் நாம் ஜும்ஆத் தொழுகையை நடத்துவோம்' என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி);நூல்:அபூதாவூத்(907)

பெருநாள் தொழுதவர்கள் அன்றைய தினம் ஜும்ஆ தொழாமல் இருக்க அனுமதி வழங்கியுள்ளதால் இந்த அனுமதியையும் நாம் நடைமுறைப்படுத்தலாம்.
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

பெருநாள் தொழுகையின் சட்டங்கள் Empty Re: பெருநாள் தொழுகையின் சட்டங்கள்

Post by முஸ்லிம் Tue Aug 30, 2011 8:52 pm

பெருநாள் தக்பீர் கூறுதல்

இரு பெருநாட்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும்.

பெருநாள் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டும் எனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்யவேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச்செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி); நூல்:புகாரி(971)

இந்த ஹதீஸில் பெருநாள் தினத்தில் ஆண்களும், பெண்களும் தக்பீர் சொல்வோம் என்று கூறப்பட்டுள்ளது. 'தக்பீர்' என்பது 'அல்லாஹு அக்பர்' என்று கூறுவது தான் என்பதை முன்னர் பார்த்தோம்.

ஆனால், '..... அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா.....' என்ற ஒரு நீண்ட பைத்தை ஓதும் வழக்கம் நம் மக்களிடம் உள்ளது. இவ்வாறு பெருநாட்களில் ஓத வேண்டும் என்பதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. இன்ன தக்பீர் சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு வரக்கூடிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாகும். ஆகவே 'அல்லாஹு அக்பர்' என்பது மட்டும்தான் பெருநாளுக்கென நாம் கூறவேண்டிய தக்பீர் ஆகும். நம்மால் எவ்வளவு முடியுமோ அந்தளவு (அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று) பெருநாளில் தக்பீர் கூறிக்கொண்டே இருக்கவேண்டும்.

ஒரு வழியில் சென்று மறுவழியில் திரும்புதல்

பெருநாள் வந்துவிட்டால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் (போவதற்கும், வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி); நூல்: புகாரி(986)

இந்த முறையை நபி(ஸல்)அவர்கள் காட்டித் தந்தார்கள் என்பதால் நாமும் கடைப்பிடிப்பது சுன்னத்தாகும். ஆக, இந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் வீட்டை விட்டுக் கிளம்பும்போதே, மாற்று வழியைத் தீர்மானித்துக் கொண்டு பெருநாள் தொழுகைக்குப் புறப்படவேண்டும்.

சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டுமா?


பெருநாள் தொழுகையின் சட்டங்கள் 100_3982

நோன்பு பெருநாள் தினத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உண்ணாமல்(தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ் பெருநாள் தொழுது விட்டு, தமது குர்பானிப் பிராணியை (அறுத்து அதிலிருந்து) முதலில் சாப்பிடுவார்கள்.
அறிவிப்பவர்: புரைதா(ரலி); நூல்: தாரகுத்னீ

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் சாப்பிட்டுவிட்டுதான் செல்வார்கள் என்று வேறு பல ஹதீஸ்களிலும் நாம் காணமுடிகின்றது. ஆனால் ஹஜ் பெருநாள் அன்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுதுவிட்டுச் சாப்பிடுவார்கள் என்று வந்திருந்தாலும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுமுன் சாப்பிடுவதை அங்கீகரித்துள்ளதையும் புகாரியில் வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'யார் நமது தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பதுபோல் கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர்' என்று குறிப்பிட்டார்கள். அப்போது அபூபுர்தா இப்னு நியார்(ரலி), 'அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்துவிட்டேன். என் வீட்டில் அறுக்கப்படும் ஆடுகளில் எனது ஆடே முதன் முதலில் அறுக்கப்படுவதாக அமையவேண்டும் என்றும் விரும்பி (அறுத்து)விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாகவும் உட்கொண்டுவிட்டேன் என்றார். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) 'அவர்கள் உம்முடைய ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத்தான் கருதப்படும்' என்று கூறினார்கள். அப்போது அவர் 'அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக் குட்டி உள்ளது. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமாக ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது எனக்குப் போதுமா?' என்று கேட்டார். 'ஆம்! இனி மேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: பராஃ(ரலி); நூல்:புகாரி

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ஹஜ் பெருநாளில் தொழுதுவிட்டு வந்து சாப்பிட்டார்கள் என்ற அடிப்படையில் தொழுதுவிட்டு சாப்பிடலாம். சாப்பிட்டு விட்டு தொழச்சென்றால் அதுவும் தவறில்லை. காரணம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்பு குர்பானிப் பிராணியை அறுத்ததைக் கண்டிக்கிறார்கள். ஆனால் அவர் சாப்பிட்டுவிட்டு வந்ததைக் கண்டிக்கவில்லை. எனவே, அவரது அச்செயலை அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்ற அடிப்படையில் ஒருவர் சாப்பிட்டு வருவதில் தவறில்லை.

ஒற்றைப்படை எண்ணிக்கையில் சாப்பிடுதல்

நோன்புப் பெருநாள் அன்று நபி(ஸல்) அவர்கள் காலை உணவாக பேரீத்தம் பழங்களை ஒற்றைப்படையாக உண்பார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழுதுவிட்டு வந்த பின்னரே குர்பானி இறைச்சியிலிருந்து உண்பார்கள்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி); நூல்: புகாரி (953)

பெருநாளின் மற்ற‌ கொண்டாட்டங்கள்:

புத்தாடை அணிதல்

தகுந்த ஆடை இல்லாத நிலையில் இருந்தால் இரவல் ஆடை வாங்கியாவது பெருநாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ளவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

கடைவீதியில் விற்பனை செய்யப்பட்ட பட்டுக் குளிராடை ஒன்றை உமர் (ரலி) எடுத்துக் கொண்டு நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! இதை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்; பெருநாளிலும், தூதுக் குழுவினரைச் சந்திக்கும் பொழுதும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளலாம்' என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'இது (மறுமைப்) பேறு அற்றவர்களின் ஆடையாகும்' எனக் கூறினார்கள். நூல்: புகாரி 948, 3054

ஆண்களுக்கு பட்டாடை மார்க்கத்தில் தடுக்கப்பட்டதால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வாங்க மறுக்கின்றார்கள். ஆனால் இந்த ஹதீஸில் பெருநாளைக்குப் புது ஆடை அணியும் நடைமுறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்திருக்கின்றது என்பதை இந்த ஹதீஸில் அறிய முடிகின்றது. அதே சமயம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனாவில் வாழ்ந்த பத்தாண்டு காலத்தில் எந்தப் பெருநாளுக்கும் புத்தாடை வாங்கியதாக எந்தக் குறிப்பையும் நாம் பார்க்க முடியவில்லை.

பெருநாள் என்பதே சந்தோஷமாக இருக்கவேண்டிய நாள்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஒவ்வொரு பெருநாளிலும் புது ஆடை வாங்கி அணிந்தால்தான் பெருநாள், இல்லையேல் அது பெருநாள் இல்லை என்ற நம்பிக்கை மக்களிடத்தில் பலமாக பதிந்துவிட்டது. அதனால் பல்லாயிரக்கணக்கான ரூபாயைக் கடன் வாங்கியாவது புத்தாடை வாங்கவேண்டும் என்று மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அதனால் வாங்க வசதியற்றவர்கள் கடன்பட்டு அவஸ்தைக்கு ஆளாகாமல், தன்னிடம் இருப்பதில் நல்ல ஆடையை அணிந்து கொண்டால் போதுமானது.

பெருநாளில் பொழுது போக்கு அம்சங்கள்

திரைப்படங்கள் போன்ற‌ மார்க்கத்தில் அனுமதிக்கப்படாதவற்றை பெருநாளன்று பொழுபோக்குகளாக அமைத்துக் கொள்ளக்கூடாது. வீர சாகச விளையாட்டுகள் போன்று விளையாடுவதை பெருநாளன்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அனுமதித்திருக்கின்றார்கள்.

ஒரு பெருநாளின்போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தாமாகவோ, அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ 'நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?' எனக் கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின் புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி), 'அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்' என்று கூறினார்கள். நான் பார்த்துச் சளித்தபோது 'உனக்குப் போதுமா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன். 'அப்படியானால் (உள்ளே) போ!' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி); நூல்: புகாரி(950, 2907)

பெருநாள் தினத்தில் இது போன்ற வீர விளையாட்டுகளை ஊர்தோறும் ஏற்பாடு செய்வதன் மூலம் மக்கள் ஹராமான காரியங்களில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும்.

அபூபக்ர்(ரலி)அவர்கள், ஆயிஷா(ரலி)அவர்களிடம் வந்தார்கள். அவர் அருகே இரண்டு சிறுமியர் 'தஃப்' அடித்துக் கொண்டிருந்தனர். அவ்விருவரையும் அபூபக்ர்(ரலி) அதட்டினார்கள். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'அந்தச் சிறுமியர்களை (பாடுவ‌தற்கு) விட்டு விடுங்கள். ஏனெனில், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள் உண்டு' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உத்வா; நூல்: நஸாயீ (1575)

இந்த ஹதீஸில் 'தஃப்' (கொட்டு) என்று விளக்கமாக வருவதால், அந்தச் சிறுமிகள் இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு பாடவில்லை என்பதையும், அபூபக்ர்(ரலி) இந்தக் கொட்டையே இசைக் கருவிகள் போன்று கருதி கடுமையாகக் கண்டித்திருக்கின்றார்கள் என்பதும் நமக்குத் தெரிகின்றது. எனவே, மார்க்கத்தில் தடுக்கப்படாத இது போன்ற அனுமதிக்கப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களைச் செயல்படுத்துவதின் மூலம் சினிமா, பாட்டுக் கச்சேரி போன்ற ஹராமான காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம்.

நாமனைவரும் நபி(ஸல்)அவர்கள் காட்டித்தந்த‌ முறையில் பெருநாளைக் கொண்டாடி ஈருலக பயன்களையும் அடைந்துக் கொள்வோமாக!



முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

பெருநாள் தொழுகையின் சட்டங்கள் Empty Re: பெருநாள் தொழுகையின் சட்டங்கள்

Post by முஸ்லிம் Sun Nov 06, 2011 6:12 pm

பெருநாள் தொழுகையின் சட்டங்கள் அவசியம் கருதி மீள்பதிவு
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

பெருநாள் தொழுகையின் சட்டங்கள் Empty Re: பெருநாள் தொழுகையின் சட்டங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum