தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை – ஷெய்க் அகார் முஹம்மத்

Go down

பாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை – ஷெய்க் அகார் முஹம்மத்  Empty பாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை – ஷெய்க் அகார் முஹம்மத்

Post by முஸ்லிம் Sun Oct 24, 2010 5:12 pm

இன்றைய உலகு இருவகையான படையெடுப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. அவையாவன:

1. இராணுவ ரீதியான படையெடுப்பு
2. சிந்தனாரீதியான கலாசாரப் படையெடுப்பு


முதல்வகைப் படையெடுப்பைப் போலவே இரண்டாம் படையெடுப்பும் உலகில் பயங்கரவிளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது.

‘உலகமயமாக்கல்’ எனும் பெயரில் இன்றைய உலகில் திணிக்கப்பட்டுவரும் நவீன காலனித்துவம் அரசியல், பொருளாதார ரீதியான அமெரிக்க தலைமையிலான மேற்குலகின் மேலாதிக்கத்தை உலகில் வலுவடையச் செய்வதை மாத்திரமன்றி சிந்தனா ரீதயாகவும், கலாசார ரீதியாகவும் உலகை அடிமைப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டிருக்கிறது.

இந்த வகையில் மேற்குலகின் உலகாயத, சடவாத சிந்தனைகளும், கலாசாரமும் மூன்றாம் மண்டல நாடுகளில் பொதுவாகவும் இஸ்லாமிய உலகில் குறிப்பாகவும் திட்டமிட்ட அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. உணவுவகைகள், குடிபானங்கள், உடைகள், நகைச்சுவை, காட்டூண்கள், மொழி, இசை, விளையாட்டுக்கள் முதலான சாதாரண அம்சங்கள் முதல் அனைத்தும் மேற்குலக கலாசாரத்தை பிரதிபலிப்பனவாகவே அமைந்துள்ளன.

உலகமமயமாதலும் பாலியல் சீர்கேடுகளும்

மேற்குலகம் சுதந்திரமான, கட்டுப்பாடற்ற ஆண், பெண் உறவை விரும்புகின்றது. எனவே, உலகமயமாக்கல் மூலம் உலகின் ஏனைய நாடுகளிலும் இந்நிலையை அது உருவாக்க விரும்புகின்றது. இஸ்லாமிய உலகிலோ கட்டுக்கோப்பான குடும்ப சமூக அமைப்பு காணப்படுகின்றது. எனவே, மேற்குலகு இவ்விறுக்கமான அமைப்பை தகர்ப்பதற்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. தனது சுதந்திரமான, எத்தகைய தார்மீக, ஆன்மீக கட்டுப்பாடுகளுமற்ற கலாசாரத்தை உலகமயப்படுத்துவதற்காக அவ்வப்போது சர்வதேச மாநாடுகளையும் நடாத்தி வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கெய்ரோவிலும், பீஜினிலும் நடைபெற்ற சனத்தொகை மாநாடுகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இம்மாநாடுகளில் பெறப்பட்ட தீர்மானங்களுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:

1. திருமணத்தின் மூலமோ, திருமணமின்றியோ ஒர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உருவாகும் உறவு அங்கீகரிக்கப்படத்தக்கதாகும்.

2. ஆணும் பெண்ணும் மணமுடிப்பது போலவே ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் மணமுடிக்க முடியும்

ஆண், பெண் பால் வேறுபட்டை (Gender perspective) மறுக்கும் இவர்கள் கணவன், மனைவி என்ற புனிதமான உறவையும் கொச்சைப்படுத்துகின்றனர். கணவனை வாழ்க்கைத்துணைவர் (Life Partner) என்ற அளவில் மாத்திரமே இவர்கள் அங்கீகரிக்கின்றனர். சட்டரீதியற்ற முறையில் பிறக்கும் குழந்தைகளைக் கூட Natural Baby என அழைத்து அங்கீகாரம் வழங்குகின்றனர். தற்போது அதனை Love Baby என அழைக்க முற்பட்டுள்ளனர். இவ்வாறு கிழக்குலகில் பொதுவாகவும், இஸ்லாமிய உலகில் குறிப்பாகவும் பேணப்படுகின்ற இறுக்கமான குடும்ப அமைப்பை சீர்குலைக்க கையாளப்படும் உத்திகளுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்.

1. சினிமா
2. தொலைக்காட்சி
3. வானொலி
4. இன்டர்நெட்
5. பொப் பாடல்கள்
6. சஞ்சிகைகள்
7. விளம்பரங்கள்
8. நவீன மோஸ்த்தர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள் (Fashion show)
9. அழகுசாதனப் பொருட்கள் (Cosmetics)


இவ்வாறு தொடர்பாடல் ஊடகங்கள், பல்தேசிய கம்பனிகள் முதலானவற்றுக்கூடாக மேற்குலகு தனது கலாசார திணிப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றது. Holly Wood திரைப்படங்களின் செல்வாக்கின் விளைவாக Bolly Wood திரைப்படங்களும் வன்முறையையும், ஆபாசத்தையும் மிகக்கேவலமாக அரங்கேற்ற ஆரம்பித்துள்ளன. இலங்கையில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் கூட ஒவ்வொரு நான்கிலும் மூன்று ஆபாசத் திரைப்படங்களாக அமைந்துள்ளன. இன்றைய சினிமாக்களில் கதையில்லை. பாடங்களோ படிப்பினைகளோ இல்லை. குறைந்தது மொழியையாவது காண முடியாது. தமிழ், ஹிந்தி சினிமாக்களில் இப்போது வன்முறையையும் ஆபாசத்தையும் தவிர வேறெதையும் பார்க்க முடியாது. குறிப்பாக தமிழ் சினிமாப்பாடல்கள் ஒரு கட்டுரையில் உதாரணத்திற்காகவேணும் மேற்கோள் காட்ட முடியாதளவிற்கு அருவெறுக்கத்தக்க ஆபாச வர்ணனைகளாக அமைந்துள்ளன. பெண்களை போகப்பொருளாகவும், போதைப்பொருளாகவும் காட்டும் வகையிலேயே பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளன. விரகம் விரசமாகி, காதல் பாலுறவாகி, காதலர்கள் காமுகர்களாக சித்தரிக்கப்படும் அவலத்தைத்தான் இன்றைய தமிழ்ச்சினிமாவில் காணமுடிகின்றது.


ஆபாசத் திரைப்படங்கள், வெப்தளங்கள், வீடியோக்கள், நூல்கள், சஞ்சிகைகள் முதலானவை மேற்குலகிற்கு அதன் கலாசாரத்தை பரப்புவதற்கான ஊடகங்களாக மட்டுமன்றி உலகநாடுகளின் பொருளாதாரத்தை சுரண்டுவதற்கான மிகச் சிறந்த வழியாகவும் அமைந்துள்ளன. இன்றைய உலகின் மிகவும் இலாபகரமான வியாபாரமாக ஆபாசத்தை சந்தைப்படுத்துவது காணப்படுகின்றது.
மேற்கண்ட கட்டுப்பாடற்ற சுதந்திர ஆண், பெண் உறவு கலாசாரம் உலகமயப்படுத்தப்பட்டதன் விளைவை இன்றைய உலகம் மிக மோசமாக அனுபவிக்கத் துவங்கியுள்ளது. இன்று இக்கலாசாரத்தின் பரவல் மனித சமூகத்தின் இருப்பையே அச்சுறுத்திவருகின்றது. இக்கலாசாரத்தின் முக்கிய விளைவுகள் பின்வருமாறு:

1. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்
2. சட்டபூர்வமற்ற கருத்தரிப்பு
3. கருக்கலைப்பு
4. கற்பழிப்பு
5. தன்னினச்சேர்க்கை
6. தாயோ அல்லது தந்தையோ இல்லாத (Single Parents) குழந்தைகள்
7. ஆட்கொல்லி எய்ட்ஸ் நோய்
8. விவாகரத்து
9. தற்கொலை
10. போதைவஸ்துப் பாவனை

இன்றைய உலகில் பற்றி எரிகின்ற பிரச்சினையாக மாறியுள்ள பாலியல் சீர்கேடுகள் தொடர்பான பிரச்சினைக்கு இஸ்லாம் கூறும் தீர்வுகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இஸ்லாமிய நோக்கில் பாலியல்

ஆண், பெண் இருபாலாருக்குமிடையே இறைவன் ஒரு வகை ஈர்ப்பை இயல்பாகவே வைத்திருக்கின்றான். இதனை இனக்கவர்ச்சி (Sex Appeal) என்பர். பசி, தாகம் எழுவது போல பாலுணர்வும் இயல்பான ஒன்றாகும். உலகவாழ்வு நிலைப்பதற்கும் இனப்பெருக்கத்திற்கும், மனிதகுலம் உட்பட அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண், பெண் உறவைத்தான்.

அணு முதல் அனைத்தையும் அல்லாஹ் ஆண், பெண் என சோடி சோடியாகவே அமைத்திருக்கின்றான். மனித உலகில் மாத்திரமன்றி மிருக உலகிலும் தாவர உலகிலும் அனைத்திலும் இச்சோடி நிலையைக் காணலாம். இப்பேருண்மையை அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.

”மேலும் (நாம்) நீங்கள் படிப்பினைப் பெறுவதற்காக ஒவ்வொன்றிலும் சோடிகளைப் படைத்துள்ளோம்.” (51:49)

”அல்லாஹ் தூய்மையானவன். அவன் பூமி முளைக்கச் செய்பவையிலிருந்தும் அவர்களிலிருந்தும் அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் சோடிகளைப் படைத்தான்.”
(36:36)


திருமணம், துறவறம், விபசாரம்

மிருக உலகம், தாவர உலகம் உட்பட ஏனைய உயிரினங்களைப் பொறுத்தவரையில் அவை இயல்பான இனக்கவர்ச்சியால் உந்தப்பட்டு இனப்பெருக்கத்தில் சுதந்திரமாக ஈடுபடுகின்றன. அந்த சுதந்திரத்தை அல்லாஹ் அவற்றிற்கு வழங்கியுள்ளான். மனிதனைப் பொறுத்தவரையில் அவன் தனது பால் உணர்ச்சியை எவ்வாறு தீர்த்துக்கொள்ளலாம் என்ற கேள்வி இங்கு பிறக்கின்றது.

இன்றைய சமயசார்பற்ற – சடவாத மேற்குலக கலாசாரம், மனிதன் தனது பாலுணர்ச்சியைத் தீர்த்துக் கொள்ள எத்தகைய கட்டுப்பாடுகளோ, வரையறைகளோ, ஆன்மீக, தார்மீக ஒழுங்குகளோ அவசியமில்லை எனக் கருதுகின்றது. திருமணம், வீடு, குடும்பம் என்பனவெல்லாம் பெண்களை நிரந்தரமாக அடிமைத்தனத்தில் வைத்திருக்கும் ஒரு சாபமே அன்றி வேறில்லை என்பது இந்தக் கலாசாரத்தின் நிலைப்பாடாகும். இக்கருத்தியலின் பயங்கர விளைவுகளை இன்றைய உலகம் எவ்வாறு அனுபவிக்கின்றது என்பதை மேலே கண்டோம்.

மறுபக்கத்தில், மனிதன் உடல் இச்சையை முழுமையாக கட்டுப்படுத்தல் வேண்டும். அது மிருக உணர்வாகும். அது ஆன்மீக விமோசனத்திற்குத் தடையானது என்று கூறும் துறவறக் கொள்கையையும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. ஒருவகையில் துறவறப்போக்கைக் கைக்கொள்ள முயற்சி செய்த உஸ்மான் இப்னு மழ்ஊன், அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் போன்ற நபித்தோழர்களை நபியவர்கள் எவ்வாறு நெறிப்படுத்தினார்கள் என்பதை வரலாற்றில் பார்க்கின்றோம்.

இஸ்லாம் பாலுணர்வை சுதந்திரமாக, எத்தகைய கட்டுப்பாடுகளுமின்றித் தீர்த்துக் கொள்வதை தடைசெய்வது போலவே சம்சார வாழ்க்கையை துறக்கும் துறவறத்தையும் பிரமச்சாரியத்தையும் விலக்கி, இரண்டிற்கும் இடையே திருமணம் என்ற ஒரு நெறியை அமைத்திருக்கின்றது. மனிதன் கௌரவமானவன். அவனது எல்லா நடவடிக்கைகளும் கௌரவமானதாகவும் நாகரிகமானதாகவும் அமைய வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இந்த வகையில் ஆண், பெண் உறவு திருமணம் என்ற உடன்படிக்கைக் கூடாக புனிதமான ஒன்றாக அமைதல் வேண்டும் என்று அது வலியுறுத்துகின்றது.

திருமண உடன்படிக்கையின்றி ஏற்படும் ஆண் – பெண் உறவை முறைகேடானது எனக் கருதும் இஸ்லாம் அதனை ‘ஸினா’ (விபசாரம்) என அழைக்கின்றது. ஸினா இஸ்லாத்தின் பார்வையில் மிகப் பெரிய பாவமாகும். அதற்கு மறுமைக்கு முன்னால் உலகிலேயே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாமியக் கொள்கையாகும்.


விபசாரத்தைத் தடைசெய்யும் இஸ்லாம் அத்துடன் நின்றுவிடாமல் அதற்கான வழிகளையும் தடைசெய்கின்றது.

”நீங்கள் விபசாரத்தை நெருங்கவும் வேண்டாம். அது மானக்கேடானதாகவும், மோசமான வழிமுறையாகவும் இருக்கின்றது.” (17:32)

விபச்சாரத்திற்கு வழிவகுப்பவை

இவ்வடிப்படையில் விபச்சாரத்திற்கு இட்டுச் செல்பவை என்ற வகையில் பின்வருவன விலக்கப்பட்டுள்ளன:

1. அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையில் இருத்தல் மற்றும் சுதந்திரமாகப் பழகுதல்.

இது பற்றி நபியவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்:

‘அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.’ (அஹ்மத்)
‘உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.’
(புகாரி, முஸ்லிம்)


குறிப்பாக ஒரு பெண் தனது கணவரின் சகோதரர்கள் முதலான நெருங்கிய உறவினர்களுடன் தனித்திருப்பது, சுதந்திரமாகப் பழகுவது கூடாது. இதனை நபியவர்கள் மரணத்திற்குச் சமமானது என வர்ணித்துள்ளார்கள். (பார்க்க ஸஹீஹுல் புகாரி)

2. அடுத்த பாலினரை இச்சையுடன் பார்த்தல்

ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)

‘அலியே! ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல.’ (அஹ்மத், அபூதாவூத்)

கெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ் கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்:
‘இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.’
(புகாரி)


3. அவ்ரத்தை காட்டுவதும், பார்ப்பதும்

அவ்ரத்தை வெளிக்காட்டுவதும் அதனைப் பார்ப்பதும் துர்நடத்தைக்குத் தூண்டுபவை என்ற வகையில் இஸ்லாம் ஓர் ஆண் உடம்பில் மறைக்க வேண்டிய பகுதி என்ன என்பது பற்றியும், ஒரு பெண் மறைக்க வேண்டிய பகுதி யாது என்பது பற்றியும் விரிவாக விளக்குகின்றது.

இவ்வாறு பாலியல் சீர்கேடுகளுக்கான எல்லா வழிகளையும் அடைத்துள்ள இஸ்லாம், மறுபக்கத்தில் மனிதன் தனது உணர்ச்சியைத் தீர்த்துக்கொள்வதற்கு புனிதமானதும் கௌரவமானதுமான திருமணம் என்ற ஒழுங்கை அறிமுகம் செய்துள்ளது.

இஸ்லாத்தின் ஒளியில் திருமணத்தினால் விளையும் நன்மைகளை பின்வருமாறு அடையாளப்படுத்தலாம்:

1. இஸ்லாம் தனிமனிதர்களை உருவாக்கி, அவர்களைக் கொண்ட குடும்பங்களை அமைத்து, இறுதியில் தன் கொள்கை வழிச் சமூகம் ஒன்றை இலக்காகக் கொண்ட மார்க்கமாகும்.இஸ்லாத்தின் இலக்குகளில் குடும்பம் ஒரு பிரதான இடத்தைப் பெறுகின்றது. இஸ்லாத்தை குடும்பவியல் சார்ந்த மார்க்கம் (Family Oriented Religion) என வர்ணிப்பர். குடும்பம் என்பது ஒரு சிறிய சமூகம் (Micro Society) என கருதப்படுகின்றது. ஒரு பெரிய சமூகத்தின் ஆரம்ப வித்தாக அமைவது குடும்பமாகும். இஸ்லாமிய சமூகத்தின் ஒவ்வொரு குடும்பமும் ஒரு கோட்டைக்கு ஒப்பானதாகும். அக்கோட்டையில் எவ்வித ஓட்டையும் தோன்றாமல் அதனைப் பாதுகாக்கும் பொறுப்பு குடும்ப அங்கத்தவர்களைச் சார்ந்ததாகும். குடும்பம் எனும் கோட்டையை பாதுகாக்கும் சிப்பாய்களாக குடும்ப அங்கத்தவர்கள் இருக்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் பெற்ற குடும்பம் எனும் நிறுவனத்தின் நுழைவாயிலாக இருப்பது திருமணம் ஆகும். திருமணம் இன்றி குடும்பம் உருவாவது சாத்தியமற்றதாகும்.

2. மனிதனிடம் காணப்படும் உணர்ச்சிகளில் பாலுணர்வே மிகவும் பலமானதாகும். அதனைத் தீர்த்துக்கொள்வதற்கான இயல்பானதுமானதும், பாதுகாப்பானதும், கௌரவமானதுமான வழியாக திருமணம் விளங்குகின்றது.

3. குழந்தைச் செல்வத்தைப் பெறுவதற்கான சிறந்த வழியாகவும், இனப்பெருக்கத்திற்கான சீரிய முறையாகவும் இருப்பது திருமணமாகும்.

4. தாய்மை உணர்வு (Motherhood), தந்தை உணர்வு (Fatherhood) சகோதர உறவு (Brotherhood) முதலான உணர்வுகளும் உறவுகளும் இன்றி மனித வாழ்வு நிறைவாக அமையாது. திருமணமே உணர்வுகளை உருவாக்கி போஷித்து வளர்க்கக் கூடியதாகும்.

5. மணவாழ்வு மனிதனில் சுறுசுறுப்பை ஏற்படுத்தவல்லது. அது மனிதனுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுப்பதோடு அவனை பொறுப்புணர்ச்சி உள்ளவனாகவும் மாற்றுகின்றது. இந்த வகையில் உழைப்பு அதிகரித்து, உற்பத்தி பெருகி, மனித வாழ்வு வளம் பெற மணவாழ்வு வழிகோலுகின்றது.

6. வாழ்க்கையுடன் தொடர்பான பொறுப்புக்கள் ஆண், பெண் இருபாலாருக்குமிடையே சரியாகப் பகிர்ந்தளிக்கப்படுவதில் வாழ்வின் வெற்றி தங்கியுள்ளது. திருமணத்திற்கூடாக இத்தகைய பொறுப்புக்கள் கணவன், மனைவிக்கிடையேயும், வீட்டின் ஏனைய உறுப்பினர்களுக்கிடையேயும் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான வாய்ப்புக் கிட்டுகின்றது.

7. குடும்பங்களுக்கிடையே தொடர்புகள் உருவாகி, பரஸ்பர அன்பும் ஒத்துழைப்பும் நிலவுகின்ற ஓர் ஆரோக்கியமான சமூகம் உருவாவதற்கும் திருமணமே காரணமாக அமைகின்றது.

8. மனஅழுத்தம், உளஇறுக்கம், கவலைகள் முதலான உளரீதியான பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற்று நிறைவானதும் நிம்மதியானதுமான ஒரு வாழ்வுக்கு திருமணம் சிறந்த வழியாகவும் விளங்குகின்றது. திருமணம் முடித்தவர்களின் ஆயுள் திருமணம் முடிக்காதவர்களின் ஆயுளை விட கூடியதாகும் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்.

திருமணத்தின் மூலம் கிட்டும் நிம்மதியையும் நிறைவையும் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது
”நீங்கள் (அமைதி) ஆறுதல் பெறுவதற்குரிய துணையை உங்களில் இருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும், உங்களுக்கிடையே அன்பையும் கிருபையையும் ஏற்படுத்தி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.”
(30:21)


குடும்ப வாழ்வை அச்சுறுத்தும் அம்சங்கள்

இல்லற வாழ்வுக்கும் அதன் நுழைவாயிலான திருமணத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் அம்சங்களை அறிந்து கொள்வது பயனுள்ளதாகும்.

துர்நடத்தை

விபசாரம், தன்னினச்சேர்க்கை முதலான முறைகேடான ஆண் – பெண் உறவுகள் குடும்பம் என்ற சிறிய சமூகத்தைத் தகர்க்கக்கூடியவை யாகும். இயற்கை நியதிக்கும் இறை நியதிக்கும் முரணான இத்தகைய உறவுகள் குடும்ப அமைதியைக் குலைத்து சமுதாயத்தைச் சீரழிக்கும் பயங்கர ஈனச்செயல்களாகும். இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபடுவோர் திருமணத்தில் ஆசையற்று, இல்லற வாழ்வில் விருப்பமற்றவராக இருப்பர். இவர்கள் திருமணம் செய்துகொண்டாலும் தமது மனைவிமாரைப் புறக்கணிப்போராக இருப்பர். இதனால் பெண்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டு அவர்கள் மத்தியிலும் பல சீர்கேடுகள் தோன்ற வழிபிறக்கும். இத்தகைய நிலையில் கணவன், மனைவிக்கிடையே விரிசல் உருவாகி குழந்தைகளின் நல்வாழ்வு பாதிக்கப்படும். மொத்தத்தில் குடும்ப நிறுவனம் சீர்குலைந்து சமூக வாழ்வு சின்னாபின்னமாகி விடும்.

இவை தவிர, முறைகேடான பாலியல் உறவுகளால் எத்தகைய பயங்கர நோய்கள் தோன்றுகின்றன என்பதை இன்றைய மருத்துவ உலகம் எடுத்துக் கூறுகின்றது. மேக நோய் முதலான பல்வேறுபட்ட மோசமான பாலியல் நோய்கள் இன்று உலக சுகாதாரத்தை அச்சுறுத்திய வண்ணம் இருக்கின்றன. இன்று உலகையே ஆட்டி வைக்கும் பயங்கர ஆட்கொல்லி நோய் எய்ட்ஸின் தொடக்கப்புள்ளி முறைகோடான பாலியல் உறவுகள் என்பதை அறியாவதவர் எவரும் இல்லை. மனநோய்கள் உருவாவதற்கும் முறைகேடான பாலியல் உறவுகள் காரணமாக அமைகின்றன என்பது இன்று நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையாகும். இத்தகைய காரணங்களுக்காகவே இஸ்லாம் முறைகேடான பாலியல் உறவுகளை மிகக் கடுமையாக கண்டித்து தடைசெய்துள்ளது.

ஓரினச்சேர்க்கை

ஏறத்தாழ ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னால் தன்னினச்சேர்க்கை என்ற தரங்கெட்ட செயலில் ஈடுபட்ட நபி லூத் (அலை) அவர்களின் சமூகத்தைப் பற்றிக் குறிப்பிடும் அல்குர்ஆன் அவர்களின் இக்குற்றச் செயல்களின் காரணமாக அவர்கள் எவ்வாறு பயங்கரமாகத் தண்டிக்கப்பட்டார்கள் என்பதை எடுத்துச் சொல்கின்றது. (பார்க்க: ஸூறத்து அஷ்ஷுஅரா : 172-174)

மனிதனின் மனத்தையும் குணத்தையும் இயல்பையும் இறைத்தொடர்பையும் கெடுத்து, இம்மை, மறுமை ஈருலக வாழ்வையும் பாழ்படுத்தக்கூடிய ஓரினச்சேர்க்கை என்ற குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டுமென்பது ஷரீஆவின் சட்டத்தீர்ப்பாகும்.

விபசாரம்

ஓரினச்சேர்க்கையைப் போலவே விபசாரமும் இஸ்லாமிய நோக்கில் மிகப் பெரிய பாவமும் குற்றச் செயலுமாகும். இஸ்லாம் விபசாரத்தை மட்டுமன்றி அதற்கு தூண்டுதல் வழங்குகின்ற அனைத்தையும் விலக்கியுள்ளது. இந்த வகையில் நாம் மேலே குறிப்பிட்டது போல, ஓர் ஆண் அந்நிய பெண்ணுடன் அல்லது ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனித்திருத்தல், ஆண்கள் – பெண்கள் சுதந்திரமாகப் பழகுதல் ஆகியவற்றுடன் நடனம், ஆபாசப் படங்கள், பாடல்கள், தரக்குறைவான இலக்கியப் படைப்புக்கள், கெட்ட பார்வை, காதல் போன்றவற்றையும் இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது.

விபசாரத்தை ஆகக் கூடிய தண்டனை வழங்கப்படவேண்டிய குற்றமாக இஸ்லாம் கருதுகின்றது. இஸ்லாமிய ஷரீஅத் அமுலில் உள்ள இடத்தில் ஓர் ஆணோ பெண்ணோ விபசாரம் புரிந்தால் அவருக்குக் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்பட வேண்டும். திருமணமாகாதவருக்கு தலா நூறு கசையடி வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.

விபசாரத்தினால் விளையும் ஆன்மீக, மறுமைப் பாதிப்புக்கள் பற்றி விளக்கும் நபிமொழிகளும் உண்டு. அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:

‘ஒருவர் விபசாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்’ (புகாரி, முஸ்லிம்)
‘விபசாரத்தை இட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:

முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்
வருமானத்தை அறுத்துவிடும்
ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்’

(ஆதாரம் : அத்தபராணி)


எனவே, தகாத பாலியல் தொடர்பு உடலாரோக்கியத்தைக் கெடுக்கின்றது. உள்ளத்தைக் கெடுக்கின்றது. அறிவையும், ஆன்மாவையும் பாதிக்கின்றது. தனிமனிதனை அழித்து, குடும்பவாழ்வை குட்டிச்சுவராக்கி விடுகின்றது. இறுதியில் முழுசமூக வாழ்;வுக்கும் வேட்டு வைக்கிறது. இஸ்லாம் மனிதனது இயல்பான பாலுணர்ச்சியைத் தீர்த்துக்கொள்ளவே பண்பாடான திருமணம் என்ற ஒழுங்கைத் தந்துள்ளது. ஹராமானவற்றை நாடவேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு இந்த தீனுக்கூடாக அனைத்தையும் ஹலாலாக்கி தந்திருப்பது அல்லாஹ்வின் பேரருளாகும்.

جَزَاكَ اللَّهُ خَيْرًا

நன்றி:- அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத்

நன்றி:- www.sheikhagar.ஒர்க்
=====================================
http://azeezahmed.wordpress.com/2010/10/22/poip/
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10933
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum